Tuesday, December 18, 2007

நச்சு , நச்சுன்னு ஒரு கதை (போட்டிக்கு அல்ல..)

நவீன பாஞ்சாலிகள்.


 

புழுதி பறக்கும் வண்டல் காற்று பூமி...

                           வெப்பக்காற்று,முகத்தை சுள்ளென சுட்டெறிக்க... கண்களில் தளும்பும் நீரை துடைக்க மனமின்றி கள்ளிக்காட்டின் முட்செடியின் நிழலில் உக்கார்ந்திருந்தாள் துர்கா.. காற்றின் வெப்பத்தை விட சூடான பெருமூச்சு..

                          பக்கத்தில் ,நிமிர்ந்த சூரஜ் ,அவளின் பார்வையில் இருந்த உக்கிரத்தை தாங்க முடியாமல் ,மீண்டும் தலை குனிந்தான்.

சில மாதங்களுக்கு முன்னே..

                        அக்னி வெய்யிலின் ஆதிக்கம் ஓங்கிய அந்த மாதத்தில்.. வேகமாய் நடக்க ஆரம்பித்தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணலும் ,முட் புதர்களும் மட்டுமே ஆக்கரமித்த அந்த வறண்ட பூமியின் தலையில் எடுத்த தாறு மாறான வகிடாய் விரிந்த ஒற்றையடி பாதையில்.. பிழைப்புக்காக ஊர் விட்டு வந்து வேலை செய்யும் கிணறு வெட்டும் பணிக்காக... இன்னும் மூன்று மைல்கள் நடக்க வேண்டும் அந்த இடம் அடைய.. முடியுமா?
இப்போதே தாகம் எடுக்கிறது.. காலையில் அவசரத்தில் ஏதும் சாப்பிடாதது தப்பா போச்சு.என்றும் இல்லாமல் இந்த சூரியனுக்கு என்மேல என்ன பகை?.தலை சுற்றுவது போல தோன்றியது..

                       தினவெடுத்த அவன் தோள்களும்,கால்களும் தளர்ந்தன.. தூரத்தில் ஏதோ நிழலாட நின்றான். நடுவயது பெண்ணொருத்தி தலையில் தண்ணீர் குடத்தோடு.சூரியன் கண்ட தாமரையாய் மல்ர்ந்து காத்திருந்தான். அருகில் வந்தவளிடம் குடிக்க தண்ணீர் கேட்டான்.

                    ஏற்கனவே வெய்யிலில் தண்ணீர் சுமந்த அலுப்பிலிருந்தவள், முகம் சுளித்தாள். உனக்கு கொடுக்கத்தான் வேகாத வெய்யிலுல ,ஒவ்வொரு படிப்படியா தண்ணி மோந்து எடுத்துக்கிட்டு வர்ரோமா?.. இன்னும் ஒரு மைல்லுல ஊற்று கிணறு இருக்கு..போய் குடிச்சுக்கோ".

                  தாகத்தை விட அவள் பேச்சு தாங்க முடியாதிருந்தது. அவளை சொல்லி குற்றமில்லை.. மழைத்துளி காணா பூமி..கிராமத்திலிருந்து தினமும் மூன்று மைல்கள் நடக்க வேண்டும் தண்ணீர் பிடிக்க.

                  வெறுப்புடன் நடையை தொடர்ந்தான்.. அப்போது தேவதையாய் ஒரு இளம் பெண்..அதே போல தலையில் தண்ணீர் குடத்துடன்.இவளும் ஓருவேளை அப்படியே சொல்லுவாளோ?..கேட்கவே தோணவில்லை அவனுக்கு..நடந்தான். அவளை தாண்டும் போது நின்றாள் அவள்.கேட்டாள் "தாகமாய் இருக்குதா?"அவனின் பதிலை எதிர் பார்க்காமல் பெரிய குடத்தின் மேலே இருந்த சிறிய குவளையை எடுத்து நீட்டினாள்.அவனின் தள்ளாட்டமான நடையைப் பார்த்து புரிந்துக்கொண்டிருப்பாளோ?.ஆச்சர்யமாய்.. கைகளை சேர்த்து ,அவள் வார்த்த நீரை பருகினான் கண்களில் நன்றி பொங்க..

                    இப்போதும் பதிலை எதிர் பார்க்காமல் போயேவிட்டாள் அவள். சே என்ன மனிதன் நான் ? தானாக வந்து உதவிய ஒருத்திக்கு ஒரு நன்றி கூட சொல்ல தோன்ற வில்லையே எனக்கு.. நாளைக்கு இதே வழியில் தானே வருவாள்.. நிச்சயம் இதற்காகவே இதே சமயத்தில் வந்து நன்றி சொல்ல வேண்டும் என முடிவெடுத்துக்கொண்டான்.

                     மறுநாள் அதே நேரம் .. அவள் கண்களில் ஆச்சர்யம். தண்ணீர் கிடைக்குமா? என்றான் பவ்யமாக கைகளை சேர்த்து குனிந்த படி.. புன்னகையுடன்
                   அதே நீர் வார்த்தல்.. சிறுகதை தொடர்கதையானது.. அவளின் தண்ணீர் குடத்தை கள்ளிக்காடு வரை தூக்கி வருவது அவனானது. முள்ளுச்செடியின் நிழலில் சிறிது ஓய்வு,கொஞ்சம் பேச்சு..

                     "இங்க எனக்கு நீ, உனக்கு நான் ,யாருமே இல்லாத உலகத்துக்கு போயிட்டா எப்படியிருக்கும்?"..அவன். "நல்லாத்தான் இருக்கு உங்க கனவு "அவள்

                        உனக்கு ரொம்ப சிரமம்ல்ல.. நானே ஊர் எல்லை வரை தூக்கி வர்ரேனே?..நான் ரொம்ப பலசாலியாக்கும்..

                         ஜய்யோ... இதுவே அதிகம்.. யாராவது ஊர் எல்லையில பாத்துப்புட்டாக்கா..என்னோட கதி அவ்வளவுதான்.. போதும் கொடுங்க.. பிடுங்காத குறையாய் வாங்கிக் கொண்டு நகர்ந்தாள்..

                      மறக்காமல் திரும்பிப்பார்த்து " நாளைக்கு இதே நேரம் " சொல்லிவிட்டு போனாள்..


காலங்கள் கடந்தன அவர்கள் காதலுக்கு நீரூற்றியவாரே....

                      சமயம் வந்தது... பணம் படைத்த முதியவர் அவளை பெண் கேட்டு வந்த போது.. "நாளைக்கு என் வீட்டுல சொல்லி நான் பெண் கேட்க சொல்லறேன். சந்தோஷமா?.." கேட்டான். கலங்கிய கண்ணீரை துடைத்துக்கொண்டு சந்தோஷமாய் தலையசைத்தாள்.

                          வந்தார் சூரஜின் அப்பா,மாமா,பெரியப்பா,சித்தப்பா எல்லாரும் ஒரு கும்பலாய்...அவர்கள் கொஞ்சம் வசதி படைத்தவர்களாகவே தோன்றியது துர்காவின் தந்தைக்கு மகிழ்ச்சியளித்தது..

                       துர்காவிற்க்கு.. கனவுகள் நிஜங்களாக கண் முன்னே வலம் வந்தன..அவர்கள் போனதும் துள்ளிக்குதித்து அப்பாவின் முன் வந்தவள் அவர் முகத்தில் கண்ட இறுக்கத்தை கண்டு திகைத்தாள். அம்மாவைப் பார்த்தாள்.பின்னால் சொல்லுகிறேன் என்ற சைகையை கண்டு குழம்பியவாரே உள்ளே சென்றாள் துர்கா.. கடவுளே என் சந்தோஷத்தை சிதைத்துவிடாதே என்ற பிராத்தனை மனதிற்க்குள்.. ஆனால் பிராத்தனைகளெல்லாம் பலித்து விட்டால்?.

                        சுலபமாய் இடியை மனதில் இறக்கிவிட்டாள் அம்மா.. " துர்க்கா.. வேற வழியில்லை.. உன்னை நல்ல படியாய் கல்யாணம் செஞ்சு கொடுக்க எனக்கு
திரணி இல்லை. இதற்க்கு மேலேயும் இப்படியே இருக்க முடியாது.. அப்பாவை பற்றித்தான் உனக்கு தெரியுமே?.அவரை மீறி என்னால என்ன செய்ய முடியும்? . இரண்டு பேரும் நீ சம்மதித்தால் நமக்கு பணம் தருவதாய் சொல்லுகிறார்கள்.தங்கைக்காவது அந்த பணத்தில நல்ல வாழ்க்கை அமையட்டுமே.. நீதான் மனசு வைக்கனும். பட்ட மரமாயிருக்கிற கிழவனை கல்யாணம் செஞ்சிக்கிறத விட, நீ விரும்பினவன் வீட்டிற்க்கு தானே போகப்போகிறாய்?."அவள் என்ன செய்வாள்? யதார்த்தம் அப்படி...

                         என்ன சொல்கிறாள் அம்மா?..வாய் கூசாமல்.. நான் விரும்பினவன் வீட்டுக்கு,பொது சொத்தாக.. சீச்சீ.. என் சூரஜிக்கு இது தெரிந்திருக்குமோ?.. அப்படி தெரிந்திருந்தால் தான், அவன் குடும்பத்தை இங்கே அனுப்பியிருப்பானா?.எதிர்த்து என்னை எங்கேயாவது கொண்டு போயிருக்க மாட்டானா?. நாளையே அவனை பார்த்து சொல்ல வேண்டும்.. என்ன தைரியம் ? ஒரு மகனுக்கு மணமகள் தேட வந்து விட்டு, எல்லா மகன்களுக்கும் கேட்டுவிட்டு போயிருக்கிறான் அவர் தந்தை. நான் என்ன பாஞ்சாலியா?..அவள் கூட சரீர ரீதியில் பாண்டவர்கள் யாரோடும் குடும்பம் நடத்தி பிள்ளை பெற்றுக் கொள்ளவில்லையே.. என்ன அருவெருப்பான விண்ணப்பம் இது..

                        அங்கே.. சூரஜின் வீட்டில்.. "என்னை கேட்காமல் என்ன காரியம் செய்து விட்டீர்கள்?.. நாளை அவள் முகத்தில் எப்படி விழிப்பேன்.?"கத்திய அவனை சுற்றி அவன் சகோதரர்கள்,தந்தை கிழவர்,தாய்..உறவினர்கள்..

                        என்ன நடந்து போச்சுன்னு கத்தறே?.. ஊருல செய்யாத தப்பையா செஞ்சிட்டோம்?.. சுத்தியிருக்கிற பத்து ஊருலயும் பொண்ணே கெடைக்கல..
எப்படி கெடைக்கும்?.எல்லா பெண் குழந்தையையும் வரதட்சணை கொடுமைக்கு பயந்து கள்ளிப்பால் கொடுத்துல்ல கொன்னோம்.
மத்த ஊருலருந்து இப்ப கெடைக்கிற பொண்ணுக்கு பணம் குடுத்து கொண்டு வர வேண்டியிருக்கு. நீ மட்டும் வாழ்ந்தா போதுமா? உன் அண்ணன்கள் இப்படி மாடா உழைச்சு ,வாழ்க்கையில ஒரு சுகமும் காணாத போய் சேரவா பெத்தேன்..?. என்னோட மத்த பிள்ளைகளும் நல்லாயிருக்கனும் .அதான் மத்த வீட்டுல நடக்கற மாதிரி உங்க நாலு பேருக்கும் ஒரே கல்யாணமா செய்ய முடிவெடுத்துட்டேன்".

                       " சுயநலக்காரன்டா நீ.. இஷ்டப்பட்டால் இங்கே இரு..இல்லே எங்களை எல்லாம் கொன்னு புதைச்சிட்டு வீட்டை விட்டு போய்க்கோ.".
அவனுடைய பலவீனமான குடும்ப பாசத்தில் அடி வைத்து விட்ட திருப்தியில் கிழவர்..

குழம்பித்தான் போனான் சூரஜ்.. பலவீனமான குரலில் "அவள் என்னுடையவள்.என்னுடையவள் மட்டும்தான்" என்று சொல்ல மட்டுந்தான் முடிந்தது.


அதே கள்ளிக்காடு...

கண்ணீருடன் அவள்..
தலைகுனிந்தவாறு அவன்..

 "அப்போ உனக்கு ஏற்கனவே தெரியும் தெரியும்?." விசும்பலோடு அவள்.
பதிலில்லை அவனிடம்.

நீ என்ன பதில் சொன்னாய்?.அவன் தோளை தட்டி கேட்டாள்.

மனதில் "நான் இருக்கிறேன் உனக்கு" என்று சொல்லேண்டா..

சொன்னான் "என்ன சொல்லறதுன்னே தெரியலை."
அதிர்ந்தாள் அவள்.. மளுக்கென்று உடைந்தது இன்னொரு நீர் தாரை கண்ணில்..

"எங்கேயாவது போய் விடலாமா?.. உன்னை அன்பா பாத்துப்பேன்.. எல்லா சந்தோஷங்களையும் தருவேன்" என்றாள்.

தலை நிமிர்ந்தான் அவன். ஆவலுடன் அவள்..

"எனக்கும் ஆசையிருக்கு... ஆனா எனக்கு உயிர் குடுத்து பஞ்சத்துலயும் எனக்கு பட்டினிபோடாம பகிர்ந்து கொடுத்த என்னோட குடும்பத்தை விட்டு வர என்னால முடியாது.. என்னை மன்னிச்சிரு.". இப்போது அவனின் கண்களிலும் கண்ணீர்.

"என்னோட கண்முன்னாடி உன்னை மத்தவங்க உரிமை கொண்டாறத பாக்கர சக்தி என் மனசுக்கு இல்லை..தயவுசெய்து என்னை மறந்துவிட்டு ,வேற யாரையாவது கல்யாணம் செஞ்சிக்கிட்டு" ... அதற்க்கு மேல் வார்த்தைகள் வரவில்லை அவனிடமிருந்து...

                          அழுது ,அழுது இறுகிய மரமாய் அவள் முகம். இனி அழுது என்ன பிரயோஜனம்.என் ராஜகுமாரன் இப்போது கையாலாகாதவனாய்..
அவனுக்கு மட்டுமே சொந்தமானவளை வெட்டி கூறு போடும்போதும் தடுக்க இயலாதவனாய்.. அவன் நிலைமையை பார்க்க இப்போது
அவளுக்கே பாவமாய் இருந்தது.அவன் கஷ்டத்தை நான் தானே தீர்க்கனும்... என்னில் ஒரு பாதியல்லவா அவன்?.

காதலுக்காக , அவனுக்காக இதைக்கூட செய்யாவிட்டால்.......


                     தெளிந்தவளாய் கண்ணீரை துடைத்துக் கொண்டு, அவன் தலையை வருடி கேட்டாள் .."தாகமா இருக்கா".. முதன் முதலில் அவளை பார்த்த போது கேட்ட கேள்வி.. அதே பரிவுடன்.

                      ஒன்றும் புரியாதவனாய் குழப்பத்திலிருந்தாலும்.. ஆமாம் என்பது போல தலையசைத்தான்.. மறுக்க முடியுமா?. முதல் சந்திப்பின் அந்த கேள்வியின் ஆற்றலை.. இப்போ தனலாய் சுட்டது..ஓரு வேளை நான் வேண்டும் என்பதால் சம்மதிக்க முடிவெடுத்து விட்டாளா?.

                      அதே புன்னகை.. திரும்பி ,பக்கத்தில் கொண்டு வந்த பானையின் மேல் இருந்த மூன்றாவது கலயத்தை எடுத்தாள், சேர்த்துப்பிடித்த அவன் கைகளில் வார்த்தாள்.ஏனோ தண்ணீரின் சுவை லேசாய் கசக்கிறதே?.ஒருவேளை மனதின் கசப்பு தண்ணீரில் தெரிகிறதோ?..அவன் குடிக்கும் அழகை பார்த்த வண்ணம் இருந்தவள். அவன் போதும் என்று சைகை செய்ததும்,அவனின் சேர்த்து வைத்த கரங்க்களை தன் கரங்களால் தாங்கி அவளும் தண்ணீர் குடித்தாள்.மிகுந்த தாகத்திலிருந்தவளைப்போல..


                             சூரஜிக்கு உடலெங்கும் ஏதோ எரிச்சல் தோன்றியது.கண்கள் இருட்ட துவங்கின.. என்னவென்று புரியாமல் அவளைப்பார்த்தான்..
துவண்ட அவனை மடியில் சாய்த்துக்கொண்டு,ஆதரவாய் அவன் கரங்களை பற்றினாள். அவள் வாயோரம் லேசாக நுரை. சொன்னாள் அவன் காதோரம் "உனக்கு நான் ,எனக்கு நீ, யாருமில்லா உலகம்..". புரிந்தது அவனுக்கு .. எரிச்சல் கூட இப்போது சுகமாய் தோன்றியது..

இறுக்கிப்பிடித்தான் அவளின் கரங்களை.




வாசகர் பஞ்ச்...

கதையில்,துர்கா எடுத்த முடிவு சரியா? தவறா? உங்கள் கருத்து என்ன?





*********************************************************************************************
கதாசிரியர் தத்துவம்ஸ்..(நாங்களும் ஆசிரியர் ஆயிட்டோமில்ல...)

                           1980 களில் பஞ்சாப் மானிலத்தில் நிலவிய வரதட்சணை கொடுமைகளால் ,பெண் குழந்தைகளை வளர்க்க பயந்து பெண்சிசு கொலைகள் பெருகின.. விளைவு 2007ல் -இப்போது சராசரியாக 1000 ஆண்களுக்கு 300 பெண்கள் என்ற விகிததில மட்டுமே உள்ளனர்.. எனவே பெண்ணை விலைக்கு வாங்குவது,மூன்று ஆண்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பது போன்ற கலாச்சாரத்துக்கு ஒவ்வாத கொடுமையெல்லாம் அங்கு சாதாரணம்.

                           சந்தோஷமான் முடிவு தான் எனக்கும் பிடிக்கும் என்றாலும்,எடுத்துக்கொண்ட கருத்தின் தீவிரத்தை உணர்த்த வேண்டி இந்த முடிவு.

                        
  தனக்கு விதிக்கப்படும் கொடுமைகளையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள பெண் ஒன்றும் அடிமையோ,உணர்ச்சியில்லா ஜடமோ அல்ல.. அவளுக்கும் ஒரு மனம் உண்டு .அதில் அவளுக்கென்று ஆசைகள், கனவுகள் உண்டுன்னு உணர்த்தத்தான் கதைக்கு இந்த முடிவு.


சோகமெல்லாம் கதையை படிக்கும் நமக்குதான்.. அவர்களுக்கு இந்த முடிவு சோகத்தை தந்திருக்காது என்று நம்புவோமாக..

தற்கொலைகளை ஒரு தீர்வாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது ,எனினும். துர்கா போன்றவர்களின் முடிவை பார்த்தாவது..
எல்லாம் சரியாகிவிடும்,அவள் நன்றாகதான் வாழுவாள்ன்னு போலி சமாதானத்தை தனக்குள் சொல்லிக்கொண்டு, பெண்ணை விலைக்கு விற்க துடிக்கும் பெற்றோர்கள் திருந்தட்டும்.

********************************************************************************************
கதையின் கதை...

                            நான் எங்கேயோ கதை மாதிரி எழுதியதை படித்து விட்டு "நீங்க ஏன் கதை எழுதக் கூடாது? ன்னு கேட்டு ஊக்கப் படுத்தி , என்னோட கதை மொக்கையை ஆரம்பிச்சி வைச்சது தோழி வேதா தான்.

                          "அப்படிங்கறிங்க? ஆனா எதப்பத்தி எழுதரதுன்னு தெரியலியே !! "ன்னு யோசிச்ச போது, அவிங்க சர்வேசன் போட்டிக்கு எழுதியிருந்த அதே கருத்தை மையமா வச்சி எழுதலாமேன்னு ,அவிங்க கதையோட கருவையே  ஜி3 பண்ண பெருந்தன்மையா விட்டு கொடுத்தாங்க...

                         சரின்னுட்டு தோனன கதைய எழுதிப்புட்டு பாத்தாக்கா, எல்லாம் தனிதனியா கொத்து பரோட்டா போட்ட மாதிரி இருந்துச்சு.
பதிவுலகத்துக்கு ஜீனியர்ன்னு ராகிங்கெல்லாம் பண்ணாம ,அத இமாலய பொறுமையோட படிச்சி ,ஆலோசனை சொல்லி,சொல் குற்றம்,பொருள் குற்றம் எல்லாம் எடிட் செஞ்சு, துண்டு, துண்டாயிருந்த பாராவையெல்லாம் அழகா தொகுத்து ஒரு மாலை மாதிரி மாத்தி கொடுத்த தோழி வேதாவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

                      எழுத நெறய பேரு இருக்காய்ங்க.. ஆனா புதியவர்களுக்கு ஊக்கம் கொடுக்க, தோழி வேதா போல நெறய பேரு முன் வரனுமின்னு கேட்டுக்கொள்கிறேன்.

                       இந்த கதையின் கதைக்கு காரணம் தோழி வேதா அவர்கள் தான் (கதைய படிச்சிட்டு ஆட்டோ அனுப்ப நினைக்கிறவர்கள் கவனிக்க...:) )

அது சரி அதென்ன கதைக்கு நச்சி,நச்சின்னு ஒரு பேருங்கறிங்களா? அது கதையை படிச்சிப்புட்டு நீங்க சுவத்துல போயி முட்டிக்கும் போது,நச்,நச்சி சப்தம் வருமில்ல... அதேதான்.. பொருத்தமாயிருக்கில்ல..

பின் குறிப்பு: எத்தனை முறை சுவத்துல முட்டிக்கிறிங்களோ..  அத்தனை                             " நச் "கள் சேர்த்து கதையின் தலைப்பை படிக்கவும்.ஹிஹி...




-------------

22 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

Anonymous said...

// தனக்கு விதிக்கப்படும் கொடுமைகளையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள பெண் ஒன்றும் அடிமையோ,உணர்ச்சியில்லா ஜடமோ அல்ல.. அவளுக்கும் ஒரு மனம் உண்டு .அதில் அவளுக்கென்று ஆசைகள், கனவுகள் உண்டுன்னு உணர்த்தத்தான் கதைக்கு இந்த சோக முடிவு.

தற்கொலைகளை ஒரு தீர்வாக எப்போதுமே ஏற்றுக்கொள்ள முடியாது
//

EXACTLY =D>

said...

aaaaha ! aaaaha! ippelam kadhaiyoda karuvai kooda G3 pannaraangala? nadathunga nadathunga!

kadhai nalla irukku rasigan!

said...

//இங்க எனக்கு நீ, உனக்கு நான் ,யாருமே இல்லாத உலகத்துக்கு போயிட்டா எப்படியிருக்கும்?"..அவன். "நல்லாத்தான் இருக்கு உங்க கனவு "அவள்//

yeva ava?

said...

//தனக்கு விதிக்கப்படும் கொடுமைகளையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள பெண் ஒன்றும் அடிமையோ,உணர்ச்சியில்லா ஜடமோ அல்ல.. அவளுக்கும் ஒரு மனம் உண்டு .அதில் அவளுக்கென்று ஆசைகள், கனவுகள் உண்டுன்னு உணர்த்தத்தான் கதைக்கு இந்த சோக முடிவு.
///
idhu mudhal nachu!

said...

//அது சரி அதென்ன கதைக்கு நச்சி,நச்சின்னு ஒரு பேருங்கறிங்களா? அது கதையை படிச்சிப்புட்டு நீங்க சுவத்துல போயி முட்டிக்கும் போது,நச்,நச்சி சப்தம் வருமில்ல... அதேதான்.. பொருத்தமாயிருக்கில்ல..
//

ithu second! so sariya thaan pottu irukeenga thalaipa.. rendu nachu!

said...

ரொம்ப நல்லா கதை எழுதியிருக்கிறீங்க ரசிகன், பாராட்டுக்கள்!

Anonymous said...

கதை நல்லா இருக்கு ரசிகன்.
Thanks to vedha aunty for helping.

Anonymous said...

:)

said...

நல்லாவே இருக்கு உங்க 'நச்' :)

said...

mmm rasigan kada aasiriyar aanathukku vaalthukkal.

said...

// rK said...

// தனக்கு விதிக்கப்படும் கொடுமைகளையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள பெண் ஒன்றும் அடிமையோ,உணர்ச்சியில்லா ஜடமோ அல்ல.. அவளுக்கும் ஒரு மனம் உண்டு .அதில் அவளுக்கென்று ஆசைகள், கனவுகள் உண்டுன்னு உணர்த்தத்தான் கதைக்கு இந்த சோக முடிவு.

தற்கொலைகளை ஒரு தீர்வாக எப்போதுமே ஏற்றுக்கொள்ள முடியாது
//

EXACTLY =D>//

முதல் வருகைக்கும்,ஆதரவு கருத்துக்கும் ரொம்ப நன்றிகள் ஆர்.கே சார்...

said...

// Dreamzz said...

aaaaha ! aaaaha! ippelam kadhaiyoda karuvai kooda G3 pannaraangala? nadathunga nadathunga!

kadhai nalla irukku rasigan!//

romba nantrikal maams

// yeva ava?//

haahaa........no comments :)))

said...

// Divya said...

ரொம்ப நல்லா கதை எழுதியிருக்கிறீங்க ரசிகன், பாராட்டுக்கள்!//

வருகைக்கும்,பாராட்டுகளுக்கும் ரொம்ப நன்றிகள் திவ்யா மாஸ்டர்...

said...

// kavithaa said...

கதை நல்லா இருக்கு ரசிகன்.
Thanks to vedha aunty for helping.//

அடடே.. கவிதா கதைல்லாம் கூட படிப்பிங்களா?..
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றிகள்..
நீங்க சொன்ன நன்றிய வேதாவுக்கு அனுப்பிடலாம்.

said...

// Anonymous said...

:)

//

நன்றிகள் நண்பரே..:)

said...

// வேதா said...

ஏற்கனவே படிச்சு கருத்து சொல்லியாச்சு, எனக்கு நிறைய வேலையிருக்கு(ஆட்டோ வர்ர சத்தம் கேட்குது நான் தலைமறைவா போயிடறேன் நல்லா இருங்க!!:):))

வாங்க வேதா .. வாங்க.. ஆட்டோவா இருக்காதே! சரியா பாருங்க ...
லாரியில்ல அனுப்புவாய்ங்கன்னு எதிர்பார்த்தேன்..:P :))


// @கவிதா,
ஹலோ நீங்க நன்றிய சொல்றதா இருந்தா என் கிட்டேயே சொல்லலாம் அதுக்கு எதுக்கு என் aunty கூப்படறீங்க :D?//

ஹிஹி... கவிதா நல்லா கேட்டுக்கோம்மா.. :)))

தலைமறைவாகறதுக்கு முன்னாடிகூட மறக்காம ,பதில் சொல்லறதுக்கு நன்றிகள் வேதா:)))

said...

// SurveySan said...

நல்லாவே இருக்கு உங்க 'நச்' :)//


ஆஹா போட்டி நடத்தரவருக்கே நச் நல்லாயிருக்குன்னா.. ரொம்ப சந்தோஷம்..

ஆமா கடைசியா சொன்ன சுவத்து முட்டிக்கிற "நச்"ச தான சொன்னிங்க?..:)))

வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றிகள்,சர்வேஸன்

said...

ரசிகன், பஞ்சாபில் நடக்கும் ( ??) யதார்த்தத்தை, கற்பனை கலந்த கதையாக, அழகாக எழுதியதற்கு ( வேதா) வாழ்த்துகள்.

தொடர்க

said...

இந்த கதையின் கதைக்கு காரணம் தோழி வேதா அவர்கள் தான் (கதைய படிச்சிட்டு ஆட்டோ அனுப்ப நினைக்கிறவர்கள் கவனிக்க...:) )

ஹிஹிஹி, இதைப் படிக்கலைன்னா, வேதா "ஆண்டி" வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிட்டு, உங்களுக்கும் குண்டு பார்சல் அனுப்பி இருப்பேன். :P

said...

// cheena (சீனா) said...

ரசிகன், பஞ்சாபில் நடக்கும் ( ??) யதார்த்தத்தை, கற்பனை கலந்த கதையாக, அழகாக எழுதியதற்கு ( வேதா) வாழ்த்துகள்.

தொடர்க//

உங்க ஆதரவுக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் சீனா சார்...
வாழ்த்துல,தோழி வேதாவுக்கான பங்கை அவிங்களுக்கு அனுப்பிடறேன்..

said...

// கீதா சாம்பசிவம் said...

இந்த கதையின் கதைக்கு காரணம் தோழி வேதா அவர்கள் தான் (கதைய படிச்சிட்டு ஆட்டோ அனுப்ப நினைக்கிறவர்கள் கவனிக்க...:) )

ஹிஹிஹி, இதைப் படிக்கலைன்னா, வேதா "ஆண்டி" வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிட்டு, உங்களுக்கும் குண்டு பார்சல் அனுப்பி இருப்பேன். :P///

வாங்க கீதா அக்கா வாங்க.. தெரியுமே.. தப்பு கண்டுபிடிக்க எதுவும் கெடைக்கலேன்னு கோபத்துல இருப்பிங்கன்னு..
அதுக்காக தானே ,உங்களுக்கு வசதியா ரெண்டாவது ஸ்டாப்பிலேயே ஆட்டோவுக்கு அட்ரஸ் குடுத்திருக்கேன்..:)))

[தோழி மன்னிக்க.. வேற வழி தெரியலை.. :P]

Anonymous said...

:)